மும்பை:
வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மகாராஷ்டிரா வியாபாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்குவதால் வெங்காயத்தின் தேவை அதிகம் இருக்கும் என்பதால், பாகிஸ்தான், எகிப்து, சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தான் மகாராஷ்டிர விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.“இந்திய விவசாயிகள், வெங்காய சாகுபடியை மேற்கொண்டுள்ள நிலையில் மத்திய அரசு எவ்வாறு இறக்குமதிக்கு முயற்சிக்கலாம்? அதுவும் எதற்காக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்? இந்திய விவசாயிகளின் நிலை பற்றி அரசுக்கு அக்கறை இல்லையா?” என்று அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.“தற்போது விடுக்கப்பட்டுள்ள டெண்டரின்படி பார்த்தாலும், நவம்பர் மாத இறுதியில்தான் இறக்குமதி சரக்குகள் இந்தியா வந்து சேரும், தற்போது இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெங்காயமும், அதே பருவத்தில் தான் அறுவடைக்கு வரும்; இவ்வாறு உள்ளூர் வெங்காயம் விற்பனைக்கு வரும் அதே சமயத்தில் இறக்குமதியும் செய்யப்பட்டால், நமது விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை எப்படி கிடைக்கும்?; இதுதான் உள்நாட்டு விவசாயிகளுக்கு சாகுபடி செலவைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு லாபம் ஏற்படுத்தித் தரும் நடவடிக்கையா?” என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.